நெல்லை, டிச. 6திருப்பரங்குன்றத்தில் கலவரத்துக்கு முயற்சிப்பதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார்.இது குறித்து அவர்9 அளித்த பேட்டி- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் பொதுமக்கள், பக்தர்கள் அல்லாத 50 பேர் கொண்ட குழு சதி திட்டமிட்டு கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். இந்தியா முழுவதும் கரசேவை என்று கூறி பாபர் மசூதியை இடித்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததாக பாஜகவினர் நினைக்கின்றனர். அந்த சம்பவத்தில் முன் நின்று கரசேவை செய்தவர்களுக்கு தற்போது கேஸ், பெட்ரோல் பங்க் ஏஜென்சி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு சூழலை உருவாக்கி பாஜக ஆட்சிக்கு வந்த முறையை இங்கும் கையாள முயல்கின்றனர். இந்த போராட்டத்தில் பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஓட்டு வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்பினர் தூண்டிவிட்டு திருப்பரங்குன்றம் சம்பவம் நடக்கிறது. இதே திருப்பரங்குன்றம் விவகாரத்தில், 2014, 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நீதிபதிகள் மூலம் வழங்கப்பட்ட நான்கு தீர்ப்பிற்கு முற்றிலும் மாறான தீர்ப்பை தற்போதைய நீதிபதி வழங்கியுள்ளார்.கலவர முயற்சி திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், சனாதன கொள்கை உள்ளவர்கள் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அது தமிழ்நாட்டில் நடக்காது. இந்த விவகாரத்தில் நான்கு தீர்ப்புக்கு முரணான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பு வரும். இந்த விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், இந்துக்களுக்கு விரோதமாக திமுக அரசு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த ஆட்சியில்தான் 3,800 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் பணிகள் ரூ. 500 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் விரும்பும் சமூக நீதிக் கொள்கையில் உள்ள ஆட்சி.இவ்வாறு அவர் கூறினார்.